திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லம்பாளையம் நொய்யல் ஆற்றங்கரை ஓரம் உள்ள காட்டுப் பகுதியில் பயன்படுத்தப்படாத கட்டிடத்தின் உள்ளே கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது, கொலை செய்யப்பட்ட வாலிபர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த மேட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பதும் இவர் ராக்கியாபாளையம் பகுதியில் தங்கியிருந்து பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், கொலையாளி மீது போக்சோ வழக்கு இருப்பது தெரியவந்தது. அதாவது, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியில் உள்ள இரண்டு வயது குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் அஜித்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், அஜித்குமார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதையடுத்து சிறையில் தன்னுடன் தங்கி இருந்த நண்பர்கள் திருப்பூர் வந்திருப்பதாகவும், அவர்களை பார்த்துவிட்டு வருவதாகவும் வீட்டில் உள்ளவர்களிடம் அஜித்குமார் தெரிவித்துச் சென்றுள்ளார்.
ஆகவே, சிறையில் இருந்து வெளியே வந்த அஜித்குமாரின் நண்பர்கள் யார் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக அஜித்குமாரை பார்ப்பதற்காக வந்துள்ளனர் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அஜித்குமாருடன் சிறையில் தங்கியிருந்த கோவை துடியலூரை சேர்ந்த வல்லரசு, திருப்பூரை சேர்ந்த கணேசன், ஷாஜகான் உள்ளிட்ட மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், மூன்று பேரும் சேர்ந்துதான் அஜித்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. அதன் படி, மூன்று பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல் ஒன்று கிடைத்தது.
அதன் விவரம் பின்வருமாறு : போக்சோ வழக்கில் கைதான அஜித்குமாரை போலீசார் கோவை சிறையில் அடைத்தபோது, அங்கு அவருக்கு வல்லரசு, கணேசன், ஷாஜகான் உள்ளிட்ட மூன்று பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் வல்லரசு உள்பட மூன்று பேரும் சிறை அறையில் கஞ்சா பயன்படுத்தியதை அஜித்குமார் சிறைக்காவலர்களிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் சிறைக்காவலர்கள் மூன்று பேரையும் எச்சரித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேர் அஜித்குமாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே அவர்கள் நான்கு பேரும் ஜாமீனில் வெளியே வந்ததனால், புத்தாண்டு அன்று மது அருந்த வருமாறு அஜித்குமாரை மூன்று பேரும் அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டு, மற்றொரு நாள் வருவதாக தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி திருப்பூர் கல்லம்பாளையம் பகுதிக்கு வருமாறு அஜித்குமாரை மூன்று பேரும் அழைத்துள்ளனர்.
அதன்படி, அஜித்குமார், சென்றதும் நான்கு பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது மூன்று பேரும், அஜித்குமாரிடம் சிறையில் கஞ்சா பயன்படுத்தியதை எப்படி காவலர்களிடம் காட்டி கொடுக்கலாம் என்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கத்தியால் சரமாரி குத்தியுள்ளனர்.
இதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத்தொடர்ந்து, மூன்று பேரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். தற்போது தனிப்படை போலீசார் விசாரணையில் சிக்கிக்கொண்டனர்.