ஹரியாணா | பனி மூட்டத்திற்கு நடுவில் பெண் சக்தியோடு தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை

கான்பூர்(ஹரியாணா): கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கைக்கு மத்தியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பெண் சக்தி தினமாக இன்று (திங்கள்கிழமை) ஹரியானாவில் இருந்து தொடங்கியது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் ஹரியாணா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குருஷேத்திரத்தை அடைந்தார். இந்தநிலையில் இன்றைய யாத்திரை பெண்கள் பங்கேற்கும் பெண்கள் சக்தி தினமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்றைய யாத்திரை ஹரியாணாவிலுள்ள கான்பூரின் கோலியன் பகுதியில் இருந்து இன்று காலை மீண்டும் தொடங்கியது.

வடமாநிலங்களில் கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் பனிபொழிவு காரணமாக ஹரியாணா மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் காலையில் வாகன விளக்குகள் ஒளி பனிமூட்டத்திற்கு இடையில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொங்கியது. ராகுல் காந்தியுடன் பெண்கள் பலர் யாத்திரையில் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தொடர் பதிவில், “வெறுப்பு இருளைக் கிழித்து, அன்பின் ஒளி இந்தியாவை ஒளிரச்செய்கிறது. ஹரியாணா மக்களுக்கான அன்பின் செய்தியைச் சுமந்து கொண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை தன் முதல் ஒளியுடன் துவங்குகிறது.

47 கி.மீ. பெண் சக்தி நாட்டை முன்னேற்றம் அடையச் செய்யும். ராகுல் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருக்கிறார். ராகுல் காந்தியின் வேகத்தில் பெண்கள் முன்னேற்றப்பாதையில் பயணிக்கின்றனர். இன்றைய இந்திய ஒற்றுமை யாத்திரை பெண் சக்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மூடுபனி விலகுகிறது.. இந்தியா இணைகிறது. வெறுப்பின் மூடுபனியை விலக்கிக்கொண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை முன்னேறி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா டெல்லி, உத்தரபிரதேசம் வழியாக தற்போது மீண்டும் ஹரியானாவிற்குள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 26 ஆம் தேதி காஷ்மீரில் யாத்திரை நிறைவடைகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.