சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”வை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.1.2023) சென்னை, தீவுத்திடலில், தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சென்னை மாநகரில் 40 வகையான கலைகளுடன் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடத்தப்படும் “சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா”-வை தொடங்கி வைத்து, கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார்.

சென்னை மாநகரில், தீவுத்திடல், கொளத்தூர் – மாநகராட்சி விளையாட்டு மைதானம், பெரம்பூர் (தெற்கு) முரசொலிமாறன் மேம்பாலப் பூங்கா, இராயபுரம் – ராபின்சன் விளையாட்டு மைதானம், மயிலாப்பூர் – நாகஸ்வரராவ் பூங்கா, செம்மொழிப் பூங்கா, நுங்கம்பாக்கம் – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம், சிந்தாதிரிப்பேட்டை – மாநகராட்சி விளையாட்டு மைதானம், தி.நகர் நடேசன் பூங்கா எதிரிலுள்ள மாநகராட்சி மைதானம், பெசன்ட் நகர் – எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, சைதாப்பேட்டை – மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம், கே.கே. நகர் – சிவன் பூங்கா, வளசரவாக்கம் – இராமகிருஷ்ணா நகர் விளையாட்டு மைதானம், அண்ணா நகர் – கோபுரப் பூங்கா, கோயம்பேடு – ஜெய்நகர் பூங்கா, அம்பத்தூர் – எஸ்.வி. விளையாட்டு மைதானம், எழும்பூர் – அரசு அருட்காட்சியகம் ஆகிய 18 இடங்களில் சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா 14.1.2023 முதல் 17.1.2023 வரை மாலை 6 மணி முதல்

9 மணிவரை நடைபெறும்.

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில், நையாண்டி மேளம், கரகாட்டம், பறையாட்டம், புரவியாட்டம், காவடியாட்டம், புலியாட்டம், தோடர் நடனம், மயிலாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள் உள்ளிட்ட 40 வகையான கலைகளுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்த விழாவில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சமூக நலன் – மகளிர் உரிமைத் துறை அமைச்சர் பி. கீதா ஜீவன், மீன்வளம் – மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், சுற்றுலாத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்ச பி.கே. சேகர்பாபு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, ஆர். கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.நா. எழிலன், ஆ. தமிழரசி, துணை மேயர் மு. மகேஷ் குமார், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., சுற்றுலாத் துறை இயக்குநர் சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் எஸ்.ஆர். காந்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.