திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை விருகம்பாக்கத்திலும் நடைபெற்றது. இதில் திமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடும் சொற்களால் பேசினார். சட்டப்பேரவையில் ஆளுநர் தவிர்த்த வார்த்தைகளை குறிபிட்டு பேசிய அவர், ஆளுநரையும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என அனைவரையும் ஒருமையில் பேசியதுடன், கொலை மிரட்டல் விடுக்கும் தொனியிலும், அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளையும் அடுக்கு மொழியில் பேசினார்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவரது பேச்சுக்கு திமுக ஆதரவாளர்களே கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு மேடையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசும்போது, “அரசு கொடுத்த பேப்பரை ஒழுங்காக படித்திருந்தால் காலில் பூப்போட்டு கையெடுத்து கும்பிட்டு அனுப்பி வைத்திருப்பேன். எங்க முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என சொல்ற அவரை செருப்பால் அடிக்கிற உரிமை எனக்கு இருக்கிறதா? இல்லையா?. நீ காஷ்மீருக்கு போடா.. நாங்களே தீவிரவாதிய அனுப்பி சுட்டுக் கொல்ல சொல்றோம். ஏன்டா அண்ணாமலை பிரான்சில தயாரித்த வாட்ச கையில் கட்டிக்கொண்டு பேசுவது தான் தேச பக்தியா?” என சகட்டுமேனிக்கு ஒருமையில் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை கொண்டு பேசியிருக்கிறார்.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியையும் அவர் விமர்சித்துள்ளார். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக ஆளுநர் மாளிகை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இணையவழியிலும், தபால் மூலமாகவும் புகார் தெரிவித்துள்ளது. அதில் ஆளுநர் ஆர்என் ரவி பற்றி அவதூறு பரப்பும் வகையில் கொச்சையாகவும், மிரட்டல் விடுக்கும் வகையிலும் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளதால், அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 124 பிரிவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. சிவாஜி கிருஷ்ண மூர்த்தியின் பேச்சுக்கு மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.