கேரள மாநிலத்தில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் (CUSAT) மாணவிகளுக்கு மாதவிடாய் நாள்களில் விடுப்பு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரளத்தில் மாதவிடாய் நாள்களில் மாணவிகள் விடுப்பு எடுக்க அனுமதித்த முதல் பல்கலைக்கழகம் என கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைகழகத்துக்கு பாராட்டு குவிகிறது. இது குறித்து மாணவர் அமைப்பினர் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்ததாகவும், அதை பல்கலைகழக நிர்வாகம் அனுமதித்ததாகவும் மாணவிகள் தரப்பில் கூறுகின்றனர்.
இது பற்றி கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் கூறுகையில், “பல்கலைக்கழகங்களில் தேர்வு எழுத வேண்டுமானால் 75% வருகை இருக்க வேண்டும். மாதவிடாய் காலத்தில் மாணவிகள் அனுபவிக்கும் கஷ்டத்தை கருத்தில் கொண்டு அப்போது விடுப்பு எடுத்துக்கொள்ள வசதியாக 2% தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 73% அட்டண்டன்ஸ் இருந்தாலே மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பூணித்துறையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளுக்கு மாதவிடாய் காலத்தில் விடுப்பு கொடுக்கப்பட்டதாக அறிந்தோம். தற்போது இந்தியாவில் வேறு எங்காவது இதுபோன்று இருக்கிறதா என ஆய்வுசெய்தபோது பீகார் அரசு ஊழியர்களுக்கு பீரியட்ஸ் காலத்தில் விடுப்பு அளிக்கப்பட்டு வருவதை அறிந்தோம். அதுபோல எங்களுக்கும் வேண்டும் என ரெஜிஸ்திரார் மேமை பார்த்து கோரிக்கை விடுத்தோம். கடந்த 3-ம் தேதி கல்லூரி திறந்ததும் பல்கலைக்கழகத்தில் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. துணை வேந்தர், ரெஜிஸ்திரார் என அனைவரும் மீட்டிங் நடத்தி மாணவிகளுக்கு அட்டண்டன்ஸில் 2% சலுகை வழங்கினர். இதன் மூலம் ஒவ்வொரு மாதவிடாய் சமயத்திலும் அந்த மாதத்தின் வேலை நாளை கணக்கில் எடுத்து 2 நாள்கள் அல்லது அதற்கு மேல் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்” என்றனர்.