கடந்த வாரம் சனிக்கிழமை (ஜனவரி 14) தொடங்கிய பொங்கல் விடுமுறை நேற்றுடன் நிறைவு பெற்றது. இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் செயல்படவுள்ளன. இதையொட்டி சொந்த ஊர் சென்றிருந்த பொதுமக்கள் பலரும் சென்னை திரும்பி வருகின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாகனமாக சுங்கக் கட்டணம் செலுத்திய பின்னர் அனுமதிக்கப்படுகின்றன. Fastag டிஜிட்டல் பேமெண்ட் வசதி இருந்தால் பிரச்சினையில்லை. ரொக்கமாக கொடுப்பது, வேறு டிஜிட்டல் பேமெண்ட், பேமெண்ட்டில் தொழில்நுட்ப கோளாறு போன்றவை ஏற்பட்டால் சிக்கல் தான். ஒரு வாகனம் கடந்து செல்வதற்கு டென்ஷன் தலைக்கேறி விடும். அப்புறம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி ஊழியர்கள் உடன் தகராறில் ஈடுபடுவர். நேற்று இரவு முதல் இன்று காலை வரை வாகன நெரிசல் சிறிதும் குறையவில்லை. வாகனங்கள் ஆமை வாகனங்கள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் பரனூர் பகுதி மூச்சு முட்டும் அளவிற்கு காணப்படுகிறது. இப்படியே போனால் சென்னை ஸ்தம்பித்து விடும். வீடு போய் சேர்பவர்களுக்கு பல மணி நேர தாமதம் ஏற்படும். இது சென்னையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோரின் நிலை சிக்கலை ஏற்படுத்தும். எனவே பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களை வேகமாக அனுப்ப வேண்டிய கட்டாயம் உண்டாகியிருக்கிறது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் இல்லாமல் அனுப்பி வைக்கப்படுகின்றன.