சூரத்: குஜராத்தில் பிரபலமான சங்வி அண்ட் சன்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் உரிமையாளர் தானேஷ் மற்றும் அவரது மனைவி அமி சங்வி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில், 9 வயது மூத்த மகள் தேவன்ஷி என்பவர் கோடிகளை துறந்து தான் விரும்பிய எளிய துறவற வாழ்க்கைக்கு மாறியுள்ளார். இவருக்கு நான்கு வயதில் தங்கை ஒருவரும் உள்ளார்.
இந்த நிலையில் ஆசா பாசங்களை துறந்து அவர் துறவறத்தை மேற்கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் ஜெயின் துறவி ஆச்சார்யா விஜய் கீர்த்தியாசூரி பங்கேற்று நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தேவன்ஷி துறவறம் பூணுவதற்கான தீட்சை வழங்கினார்.
இதுகுறித்து குடும்ப நண்பர் நிரவ் ஷா கூறும்போது, ‘‘தேவன்ஷி சிறுவயதிலேயே துறவிகளுடன் 700 கி.மீ. தூரம் நடைபயணம் மேற்கொண்டு அவர் இந்த துறவற வாழ்க்கையை ஏற்றுக் கொண்டுள்ளார்’’ என்றார்.