ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம்… கமல் ஹாசன் முடிவு என்ன?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி, தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. எந்த கூட்டணியில் யாருக்கு சீட்? வேட்பாளர் யார்? எனப் பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் இரண்டு விஷயங்கள் உறுதி செய்யப்பட்டு விட்டன. ஒன்று,
திமுக
கூட்டணியில்
காங்கிரஸ்
கட்சி மீண்டும் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் வேட்பாளர்

இந்த கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா தந்தையுமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதுதொடர்பாக தொண்டர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றனர்.

களமிறங்கும் அதிமுக

இல்லையெனில் அவரது மனைவி வரலட்சுமி, 2-வது மகன் சஞ்சய் சம்பத், மறைந்த திருமகன் ஈவேரா-வின் மனைவி பூர்ணிமா ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இரண்டாவது, அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிடம் இருந்து சீட் திரும்ப பெறப்பட்டு விட்டது. எனவே அதிமுக போட்டியிட தயாராகி வருகிறது.

உட்கட்சி பூசல்

ஆனால் உட்கட்சி பூசல் காரணமாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இரு அணிகளாக பிரிந்து காணப்படுகின்றனர். இதில் எடப்பாடி தரப்பு போட்டியிட தீவிரமாக தயாராகி கொண்டிருக்கிறது. அதில் வேட்பாளர் யார்? இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

ஓபிஎஸ் அணி தீவிரம்

மறுபுறம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளரை நிறுத்த ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓபிஎஸ் அணியின் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர நாம் தமிழர் கட்சி,
மக்கள் நீதி மய்யம்
, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கமல் ஹாசன் போட்டியிடுவாரா?

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் போட்டியிட வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஏனெனில் சமீப காலமாக காங்கிரஸ் உடன் கமல் ஹாசன் நெருக்கம் காட்டி வருகிறார். டெல்லியில் கடந்த டிசம்பர் 24ஆம் தேதி நடந்த ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டு கவனம் ஈர்த்தார்.

திமுக கூட்டணி உடன் நெருக்கம்

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்ற போது அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்திருந்தார். இவையெல்லாம் திமுக, காங்கிரஸ் உடன் மக்கள் நீதி மய்யம் கைகோர்க்கும் என்பதை காட்டுகிறது. வரும் 2024 மக்களவை தேர்தலை ஒட்டி தற்போதே அரசியல் கணக்குகளை போட தொடங்கி விட்டார் கமல் ஹாசன். அப்படி இருக்கையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல் ஹாசன் போட்டியிட மாட்டார் என்கின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.