கடந்த 4-ந் தேதி ஈரோடு மாவட்டத்தின் கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இதனால், அந்த தொகுதி காலியாக இருந்தது.
அந்த நேரம் இந்தியாவில் மூன்று மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. அப்போதே ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றுத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன் படி, அந்தத் தொகுதியில் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் வந்துள்ளதால் மூன்று பறக்கும் படை மற்றும் மூன்று கண்காணிப்புக்குழு மற்றும் வருமான வரி அதிகாரிகள் குழுவும் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கொண்டு சென்றால் அவை பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அனைத்து வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர்.
இந்தத் தொகுதியில் பெரும்பாலும் ஜவுளி சார்ந்த தொழில்கள் அதிக அளவில் இருக்கும் என்பதால், சிறிய ஜவுளிக்கடைகள் முதல் பெரிய ஜவுளிக்கடைகள் என்று சுமார் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இதனால், இங்கு நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கில் பண வர்த்தகம் நடைபெற்று வரும் நிலையில், தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தொழிலதிபர்கள், வியாபாரிகள் என்ன செய்வதென்று அறியாமல் திண்டாடி வருகின்றனர்.