உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் நேபாளத்திற்கு ஆன்மிக சுற்றுலா சென்றனர். நேபாளத்தின் திரிவேனி பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலத்திற்கு சென்றுவிட்டு நேற்று மாலை எல்லை வழியாக இந்தியா திரும்பினர்.
இந்திய-நேபாள எல்லையில் நேபாளத்தின் துஹிபெரி என்ற பகுதியில் பேருந்து வந்தபோது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 குழந்தைகள் உள்பட 60 பேர் படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நேபாள மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள பிருத்வி சந்த் மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்ததாகவும் பேருந்தின் மேற்கூரையில் அதிக பாரம் ஏற்றப்பட்டதால், அதிவேகமாக கடக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.