கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகைக்கடை சுவற்றில் துளையிட்டு தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன்தீர்த்தம் மெயின் ரோட்டில் திருப்பத்தூரை சேர்ந்த சேகர்(52) என்பவர் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினை இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சேகர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதையடுத்து நேற்று காலை நகை கடையின் பின்புற சுவற்றில் துளை போட்டு இருப்பதை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் இது குறித்து கடை உரிமையாளர் சேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து விரைந்து வந்த சேகர் கடையை துறந்து உள்ளே பார்த்தபோது 20 பவுன் தங்க நகைகள் மற்றும் 25 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தது.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சேகர் ஊத்தங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நகை கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவையும் கொள்ளையர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதையடுத்து நகை கடை சுவற்றில் துளை போட்டு கொள்ளை அடித்த மர்ம நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.