சென்னையிலுள்ள புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் தங்கள் உடமைகளுடன் நடை மேம்பாலத்தை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இந்த நிலையில், அவர்கள் எளிதாக ரயில் நடைமேடைக்கு செல்வதற்கு வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது. அதன் படி, அரக்கோணம், வில்லிவாக்கம், பேசின்பாலம், வியாசர்பாடி, ஆவடி, கொரட்டூர் உள்ளிட்ட இருபது ரெயில் நிலையங்களில் லிப்ட் வசதி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகள் சென்னை புறநகர் மின்சார ரெயில் நிலையங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக ரெயில்வே அதிகாரி ஏழுமலை தெரிவித்ததாவது:- “புறநகர் மின்சார ரெயில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதாவது, ரெயில் நிலையங்களில் தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் லிப்ட் வசதி உள்ளிட்டவை படிப்படியாக மேம்படுத்தப் படுகின்றன. இந்த பணிகள் இன்னும் மூன்று மாதத்தில் நிறைவடைய உள்ளது. இந்தத் திட்டம் வயதானவர்கள் நடைமேடைகளுக்கு எளிதாக செல்வதற்காக செயல்படுத்தப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.