‘ஸ்டராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு

சென்னை: ‘தமிழகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும். ‘ஸ்ட்ராங் ரூம்’ அமைந்துள்ள பகுதிகளில் டிரோன் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவை திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ திங்கள்கிழமை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “நீலகிரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்திருக்கக் கூடிய ஸ்ட்ராங் ரூமில் இருக்கும் சிசிடிவி கேமராக்கள் கடந்த 27-ம் தேதியன்று 20 நிமிடங்களுக்கு இயங்கவில்லை. தொடர்ச்சியாக அந்த சிசிடிவி கேமராக்கள் இயங்கி வந்ததால், மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று நீலகிரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ஓர் அறிக்கை கொடுத்திருந்தார்.

எனவே, இதுபோன்ற நிலை தமிழகத்தில் உள்ள மற்ற எந்த தொகுதிகளிலும் ஏற்படக் கூடாது என்பதை வலியுறுத்தி திமுக சார்பில் கோரிக்கை மனு ஒன்றை தேர்தல் ஆணையத்திடம் கொடுத்திருக்கிறோம். குறிப்பாக, தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எவ்வித பழுதுமின்றி முழுமையாக இயங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நாளன்று அந்த பாதுகாப்பு அறைகள் திறக்கப்படும் வரை சிசிடிவி கேமராக்கள் செயல்பட வேண்டும்.

ஸ்ட்ராங் ரூம் தொடர்பான காட்சிப் பதிவுகளை வேட்பாளர்களின் முகவர்கள் கேட்கும்போது வழங்க வேண்டும். மேலும், ஸ்ட்ராங் ரூம் அமைந்துள்ள பகுதிகளில இருந்து குறைந்தது 500 மீட்டர் தொலைவுக்கு டிரோன் போன்ற கருவிகள் பறப்பதற்கு தடை விதிக்க வேண்டும். அந்தப் பகுதிகளை No Drone Flying Area என்று அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். இந்த இரண்டு கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியிருக்கிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் ஒன்று பழுதடைந்த சம்பவம் குறித்து ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் விவரம்: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஒரு சிசிடிவி கேமரா பழுது – ஆட்சியர் ஆய்வு

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.