'நுங்கு சாப்பிட்டா மார்பகம் பெருசாகும்'… விசாரணைக்கு ஆஜரானார் டாக்டர் ஷர்மிகா!

பாஜக நிர்வாகியான டெய்சி சரணின் மகள் ஷர்மிகா. இவர் சித்த மருத்துவர். பொதுமக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உடல் சம்மந்தமான பிரச்சினைகளை குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் பேசி வரும் டாக்டர் ஷர்மிகா சமூக ஊடகங்களில் பிரபலமாகினார். ஆனால், அதற்குள் சர்ச்சையில் சிக்கி தற்போது வீடியோ வெளியிடுவதையும் குறைத்துள்ளார்.

அண்மையில், இவர் மாட்டு கறியை சாப்பிடக்கூடாது, அது ஒரு குல தெய்வம். நம்மை விட பெருசாக இருக்கும் விலங்குகளை நாம் சாப்பிட்டால் செரிக்காது, அதனால் உடல் பாதிக்கப்படும் என்று பேசியது பயங்கர சர்ச்சையானது. அதனை தொடர்ந்து, நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு மார்பகங்கள் பெருசாகும், குளோப் ஜாமூன் சாப்பிட்டால் உடல் எடை கூடும், கண்ட கண்ட உணவுகளை சாப்பிட்டால் டெங்கு, மலேரியா வரும் என்று கூறியிருந்தார்.

இதற்கு மருத்துவ துறையில் இருப்பவர்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். மேலும் ஷர்மிகா மீது விமர்சனங்கள் வர தொடங்கின. இந்த நிலையில், மாட்டு கறியை குறித்து சித்த மருத்துவத்தில் குறிப்புகள் இல்லை என்று ஹோமியோபதி மருத்துவத்துறையின் இணை இயக்குனர் பார்த்திபன் தெரிவித்தார். அத்துடன் டாக்டர் ஷர்மிகா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், டாக்டர் ஷர்மிகா டெங்கு, மலேரியா மற்றும் குலாப் ஜாமுன் குறித்து ஒரு ஃப்லோவில் பேசியதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்டும் அண்மையில் வீடியோ வெளியிட்டார். இதற்கிடையே தவறான மருத்துவ குறிப்புகளை கூறி வருவதாகவும் அதுகுறித்து டாக்டர் ஷர்மிகா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்தநிலையில், இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக ஆஜராகியுள்ளார். ஷர்மிகா இதுவரை பேசியுள்ள மருத்துவ குறிப்புகளை குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு வருகின்றனர். விசாரணை முடிந்த பிறகு கூடுதல் விவரங்கள் வெளியாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.