மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் திரைப்படத்தின் மூலம் 1986ஆம் ஆண்டு தமிழ்த் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஈ ராமதாஸ். அதனைத் தொடர்ந்து ராமராஜன் நடித்த ராஜா ராஜா தான், சுயம்வரம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கிய இவர், எழுத்தாளராவும், பல்வேறு படங்களின் கதை விவாதங்களிலும் பங்கு பெற்றார்.
வசூல் ராஜா MBBS படத்தில் வார்டு பாயாக நடித்த ஈ ராமதாஸ், அதன்பிறகு யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். விசாரணை திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துப் பாராட்டுகளைப் பெற்றார். இந்நிலையில், ஈ.ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈ ராமதாஸ் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.