மக்களவைத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும்: சசிகலா நம்பிக்கை

திருவாரூர்: மக்களவைத் தேர்தல் 2024-க்குள் அதிமுக இணைப்பு நடக்கும் என்று சசிகலா நம்பிக்கை தெரிவித்தார்.

மன்னார்குடி அருகே உள்ள சுந்தரக்கோட்டையில் இன்று (ஜன.24) செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “ஒரு கட்சியில் இரண்டு, மூன்று பேர் சேர்ந்து முடிவு எடுக்க முடியாது. அப்படி முடிவு எடுக்கும் கட்சி திமுகவாக இருக்கலாம். அதிமுக மிகப் பெரியது. பாஜக அலுவலகம் செல்லும் நிலையில் அதிமுக இல்லை. இதைப் புரிந்துகொள்ள வேண்டியவர்கள், புரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்திப்பதற்கான முயற்சிகளை எடுத்து கொண்டுதான் உள்ளேன்.

அதிமுக தொண்டர்களின் முடிவுதான் என்னுடைய முடிவு. தொண்டர்களின் குமுறலைப் பார்த்துக் கொண்டுள்ளேன். இரட்டை இல்லை சின்னத்தை யாரும் எதுவும் செய்ய முடியாது. சில பேரை எடை போட்டுக் கொண்டுள்ளேன். பொதுச் செயலாளர் பதவியை அளிக்கக் கூடிய இடத்தில் தொண்டர்கள்தான் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்குள் அதிமுக இணைப்பு நடக்கும்.

தேர்தலின்போது ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்று ஒரு பெட்டி நிறைய மனுக்களை வாங்கி, பூட்டி, சாவி என்னிடம் இருக்கும். ஆட்சிக்கு வந்ததும் இதனை திறந்து குறைகளை தீர்ப்பேன்’ என்றார். ஆனால், இன்னும் அந்தப் பெட்டி திறக்கப்படவே இல்லை. ஒருவேளை சாவி தொலைந்து போய்விட்டதுபோல.

யாரையும் குறை சொல்ல முடியாது. நாம் என்ன கைக்குழந்தையா? நம்மை அவர்கள் கட்டுப்படுத்த. யாரலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. என் நிழலைக் கூட நெருங்க முடியாது. அனைவரும் திமுகவை வீழ்த்த கைகோக்க வேண்டும்” என்று சசிகலா கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.