கடலூர் மாவட்டத்தில் காணாமல் போன 3 வயது சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம் நாச்சியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன். இவருடைய மகன் அபிநாத் (3) நேற்று முன்தினம் வீட்டில் இருந்து காணவில்லை. இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காணாமல் போன அபினாத்தை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அபிநாத் எங்கு தேடியும் கிடைக்காததால் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அபிநாத்தை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அருள்செல்வன் வீட்டு அருகே உள்ள கிணற்றிலிருந்து நேற்று இரவு துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து சந்தேகமடைந்த குடும்பத்தினர் கிணற்றில் பார்த்தபோது சிறுவன் அபிநாத் பிணமாக மிதந்துள்ளான்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் கிணற்றில் கிடந்த சிறுவனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.