கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே வேலம்பட்டியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. அந்த மதுபான கடைக்கு எதிரில் நாகோஜனஅள்ளி பேரூராட்சியின் 4வது வார்டு திமுக கவுன்சிலர் காஞ்சனா என்பவரின் வீட்டில் அரசு பார் நடத்த உரிமம் இருப்பதாக கூறி சகல வசதிகளுடன் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுகிறது. இந்த மது விற்பனையில் திமுக கவுன்சிலர் காஞ்சனா நேரடியாக ஈடுபட்டுள்ளார். இந்த டாஸ்மாக் கடையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அரசு பள்ளி அமைந்துள்ளது.
திமுக கவுன்சிலர் என்பதால் டாஸ்மார்க் நிர்வாகம் மற்றும் போலீசார் உரிமம் இன்றி பார் நடத்தும் காஞ்சனா மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதேபோன்று சந்தூர் சாலையில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய அனுமதி பெறாத பார் செயல்பட்டு வருகிறது. குடிமக்கள் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் 24 மணி நேரமும் மது வாங்கி அருந்தி வருகின்றனர். அதேபோன்று மாத்தூர் அரசு அனுமதி பெற்ற பார்களில் அதிகாலை முதல் மது விற்பனை நடந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
காவல்துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குமுறுகின்றனர். இதனிடையே நேற்று இரவு திமுக கவுன்சிலர் காஞ்சனா வீட்டில் சோதனை செய்த காவல்துறையினர் 500க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு திமுக கவுன்சிலர் காஞ்சனாவின் கணவர் ராஜாவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் போச்சம்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.