வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி சந்திப்பு நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது இரு நாடுகளுக்கு இடையே முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் ஜனவரி 26ல் கொண்டாடப்படும் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும்படி எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசிக்கு பிரதமர் மோடி கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்தார். அந்தக் கடிதத்தை ஏற்று எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி நேற்று (ஜன.,24) இந்தியா வந்தார். அவருடன் 180 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளனர்.
எகிப்து அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
இந்நிலையில், இன்று(ஜன.,25) காலை ஜனாதிபதி மாளிகைக்கு வந்த பதா அல் சிசிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, டில்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் எகிப்து அதிபர் அப்தெல் பதா அல் சிசி சந்திப்பு நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். இச்சந்திப்பின்போது, வேளாண்மை, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் இரு தரப்பு உறவை மேம்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
எகிப்து அதிபர் சிசியை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அரபு-ஆப்பிரிக்க நாடுகளின் அரசியலில் முக்கியப் பங்கு வகித்து வரும் எகிப்துடன் நட்புறவை மேம்படுத்த இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement