கோயம்பேடு மார்க்கெட் : ஆப்பிள் விற்று தருவதாக கூறி பண மோசடி செய்த வாலிபர் கைது.!

சென்னையில் உள்ள சூளைமேட்டில் நெடுஞ்சாலை தெருவைச் சேர்ந்தவர் நாசர். இவர், தினமும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இருந்து ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்து, கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்தார். 

இவரிடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் நகரைச் சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து ரூ.32 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள்களை வாங்கி, கொடுத்து அதனை விற்பனை செய்து தரும்படி கொடுத்துள்ளார். 

அதன் படி, ஆப்பிளை வாங்கி விற்பனை செய்த நாசர், ரூ.32 லட்சத்தில் ரூ.6 லட்சத்தை மட்டும் ராஜேஷிடம் கொடுத்து விட்டு மீதி ரூ.26 லட்சத்தை திருப்பி கொடுக்காமல் இருந்து வந்தார். 

இதையடுத்து, ராஜேஷ்குமார் நாசரிடம் தனக்கு தரவேண்டிய ரூ.26 லட்சத்தை தருமாறு பலமுறை கேட்டுள்ளார். ஆனால், நாசர் பணத்தை தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதற்கிடையே நாசர் திடீரென தலைமறைவானதால் அதிர்ச்சியடைந்த ராஜேஷ்குமார், பண மோசடி குறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து நாசரை தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், நேற்று நாசர் கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி, போலீசார் மாறுவேடத்தில் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த நாசரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.