பழனி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்.. கோவை, மதுரையில் இருந்து சிறப்பு ரயில்..!

பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவை மற்றும் மதுரையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி முருகன் கோயிலில் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக கோவை மற்றும் மதுரையில் இருந்து முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்குவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, மதுரை – பழனி இடையே பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு பழனி சென்றடையும். மறு மார்க்கத்தில், பிப்ரவரி 3, 4, 5 ஆகிய தேதிகளில் பகல் 2.30 மணிக்கு பழனியில் புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடையும். இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் கோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பகல் 1 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையம் சென்றடையும். மறு மார்க்கத்தில், பிப்ரவரி 4, 5, 6 ஆகிய தேதிகளில் பகல் 2 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.30 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயில்கள் மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.