திருவள்ளூர் மாவட்டத்தில் 21 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், வீட்டில் மறைத்து வைத்து விற்பனை செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே ஆரணி கம்பர் தெரு மற்றும் அத்திக்குளம் மேடு பகுதிகளில் மது பாட்டில்கள் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக ஆரணி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து போலீசார் அப்பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கம்பர் தெரு பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த காஞ்சனா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 13 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அத்திக்குளம் மேடு பகுதியில் நடத்திய சோதனையில், வீட்டில் பொதிக்கு வைத்து மது விற்பனை செய்த பத்மாவதி (65) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ஒன்பது மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவர்கள் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.