நேற்று முன்தினம் இரவு அசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தியில் இருந்து நூற்று முப்பத்து நான்கு பயணிகளுடன் விமானம் ஒன்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து இறங்க தயாராக இருந்தது.
இந்த விமானத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சஜித் அலி என்பவர் சென்னையில் கல்லீரல் சிகிச்சை பெறுவதற்காக பயணம் செய்து வந்தார். இந்நிலையில், விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்த போது, சஜித் அலிக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது.
இது தொடர்பாக அவரது சகோதரர் விமான பணிப்பெண்களிடம் தகவல் தெரிவித்தார். அதன் படி, பணிப்பெண்கள் சஜித் அலிக்கு முதலுதவி அளித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விமானி சென்னை விமான நிலைய கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, மருத்துவ குழுவை தயாராக இருக்கும் படி தெரிவித்தார்.
இதையடுத்து, விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் மருத்துவ குழு விரைந்து சென்று சஜித் அலியை பரிசோதனை செய்தபோது அவர் நடுவானிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த விமான நிலைய தலைமை காவலர் பாண்டி மற்றும் போலீசார் விரைந்து சென்று உயிரிழந்த சஜித் அலி உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், விமான நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து அசாம் மாநில கவுகாத்தியில் இருந்து சென்னை வந்த விமானம் மீண்டும் பெங்களுருக்கு இரண்டு = மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.