கலைஞரின் பேனா சின்னம்… கருத்து கேட்பு கூட்டத்தில் சீமான் பங்கேற்பு..!

சென்னை மெரினாவில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்
சீமான்
விமர்சித்தும், கண்டித்தும் வருகிறார். மேலும், என்னை மீட்டி அவர்கள் பேனா தூணை அமைக்க முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.

81 கோடியில் கட்டப்படவுள்ள இந்த பேனா நினைவுச்சின்னம் மெரினா கடற்கரையில் இருந்து கடலுக்குள் சுமார் 360 மீட்டர் தொலைவில் அமைக்கப்படவுள்ளது. இதனை அருகில் சென்று பார்க்க நினைவிடத்தில் இருந்து 290 மீட்டருக்கும், கடற்கரையில் இருந்து 360 மீட்டருக்கும் பாலம் கட்டடப்பவுள்ளது.

இதற்கு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆவணங்களை இறுதி செய்து, அவற்றை மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் சமர்ப்பித்து அதன் பிறகு மத்திய அமைச்சகத்தின் குழுவுக்கு பரிந்துரைக்க வேண்டும்.

அந்தக் குழு CRZ அனுமதிக்கான மனுவை பரிசீலிக்கும். கடலோர மண்டல மேலாண்மை ஏற்கனவே இந்த திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணி துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், நினைவு சின்னம் கட்டமைப்புக்கான மாநில அரசு வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், பேரிடர் மேலாண்மை திட்டத்துடன் கூடிய இடர் மதிப்பீட்டு அறிக்கை உட்பட பிற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தது. மேலும், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக வரும் ஜனவரி 31ம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாளை நடைபெறும் கருத்து கேட்பு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் நான் நாளை பங்கேற்க உள்ளேன்.

”சின்னக் கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி, சென்னை.

நாள்: சனவரி 31, 2023 (நாளை) காலை 10.30 மணி”

நாம் தமிழர் கட்சிப் பிள்ளைகளும் பெருந்திரளாய்க் கலந்துகொள்ள இருக்கின்றனர். கடல் சூழலியல் குறித்த அக்கறையுள்ள அனைவரும் பங்குபெறலாம்” என்று இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.