திருவனந்தபுரம் கல்லூரியில் பாலியல் கல்வி நிகழ்ச்சி – மாணவர்களுடன் மாணவிகளும் ஆர்வமுடன் பங்கேற்றனர்

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் கல்லூரியில் நடந்த பாலியல் கல்வி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் மாணவிகளும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

பாலியல் கல்வி என்றாலே அது ஏதோ விலக்கி வைக்க வேண்டிய ஒன்று என்ற கருத்து இந்த 21-ம் நூற்றாண்டிலும் நிலவாமல் இல்லை. இந்த தருணத்தில் கேரள மாநிலத்தில் அதன் தலைநகரான திருவனந்தபுரத்தில் இந்த பாலியல் கல்வி கூடாது என்ற தடையை கல்லூரி மாணவ, மாணவிகள் உடைத்திருக்கிறார்கள். பாலியல் கல்வி நிகழ்ச்சி ஒன்றை அவர்கள் நடத்தி இருக்கிறார்கள்.

திருவனந்தபுரத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழக கல்லூரியில் பாலியல் கல்வி தொடர்பான நிகழ்ச்சிக்கு அந்தக் கல்லூரியின் என்.எஸ்.எஸ். அமைப்பு, விவோக்ஸ் என்னும் பாலியல் சுகாதார தளம், பாலியல் கல்வியாளர்கள், ஆலோசகர்கள், சிகிச்சையாளர்கள் அமெரிக்க சங்கம் ஆகிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதுவும் கேரள ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு பெண்ணை அவரது வெளிப்படையான அனுமதியின்றி இளைஞர்கள் தொடக்கூடாது என்று கருத்து தெரிவித்த நிலையில், நடந்துள்ளது.

நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவிகளின் எண்ணிக்கைதான் அதிகம். 2½ மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஆபாச படம் வரையில் பாலியல் தொடர்பான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

ஒரு மாணவரின் கேள்விக்கு பாலியல் கல்வி பயிற்சியாளர் சங்கீத் செபாஸ்டியன் பதில் அளிக்கையில், “உங்கள் உணர்வுகள் மற்றவருக்கு சங்கடத்தை ஏற்படுத்துமா இல்லையா என்பது உங்களால் கட்டுப்படுத்த முடியாத ஒன்று” என பதில் அளித்தார். மேலும், “உங்களிடம் சரியான தகவல்கள் இருக்குமானால், 80 சதவீத பாலுறவு சிக்கல்கள் மருந்துகளோ, மருத்துவ ஆலோசனைகளோ இன்றி கூட தீர்த்துக் கொள்ள முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

தபசயா என்ற இறுதி ஆண்டு பட்டப்படிப்பு அரசியல் அறிவியல் மாணவி, “இந்த அமர்வு பாலியல் ரீதியிலான மாயைகள், தவறான புரிந்துகொள்ளுதல்களை தெளிவுபடுத்திக்கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது” என தெரிவித்தார். மேலும், “பாலியல் என்பது அசிங்கமான வார்த்தை அல்ல, அது ஒரு நபரின் ஆரோக்கியமான வாழ்க்கையின் அங்கம்தான்” என குறிப்பிட்டார்.

மாயா என்ற மற்றொரு மாணவி, “நான் என் பள்ளியில் ஒருபோதும் பாலியல் கல்வியைப் பெற்றதில்லை. இன்று நான் பாலியல் தொடர்பாக வெட்கப்பட ஏதுமில்லை என்று கற்றுக்கொண்டேன். இது பொறுப்புணர்வுடன் மதிப்புடன் புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று” என்று குறிப்பிட்டார்.

விலங்கியல் துறை உதவி பேராசிரியையும், என்.எஸ்.எஸ். திட்ட அதிகாரியுமான ஷீபா கூறுகையில், “இணையதளங்களில் உலா வருகிற ஆபாசம், பெரும்பாலான இளைஞர்களுக்கு உண்மையான பாலியல் கல்வியாக மாறி இருக்கிறது. ஆனால் ஆபாசத்தின் மூலம் கிடைக்கிற பாலியல் கல்வி தவறான தகவல்களைத் தரும். அதனால் தான் இளைய தலைமுறையினருக்கு மருத்துவ ரீதியிலான துல்லியமான பாலியல் கல்வியை வழங்குவது முக்கியமாக அமைந்துள்ளது” என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு அமர்வு, பாலுறவில் உணவுக்கும், உடல்தகுதிக்கும் உள்ள தொடர்பை எடுத்துக்காட்டியது. உணவு விடுதி ஒன்றின் அதிபரும், இந்த பிரசார நிகழ்ச்சியின் நிர்வாக கூட்டாளியுமான அன்னு குஞ்சப்பன, நொறுக்கு தீனிகள் எப்படி பாலியல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதை எடுத்துக் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.