'எங்கள் கைகள் சும்மா இருக்காது'… சீமானுக்கு அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை..!

கலைஞருக்கு பேனா சிலை அமைத்தால் அந்த சிலையை உடைப்பேன் என்று
சீமான்
கூறியதற்கு திமுகவினர் சமூக வலைத்தளங்களில் சாடி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சீமானின் எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை மெரினாவில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் எழுத்துகளை குறிக்கும் வகையில் கடலுக்குள் பேனா வடிவ தூண் எழுப்ப திமுக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 81 கோடி செலவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்தே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.

மேலும் இதனால், கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படும், மக்கள் வரிப்பணத்தில் ஏற்கனவே மெரினாவை சுடுகாடாக்கி நினைவிடங்களை கட்டிவிட்டீர்கள், மீனவ மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற விஷயங்களை முன்வைத்து சீமான் எதிர்ப்பை காட்டி வருகிறார்.

இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைப்பதை குறித்து மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் கால நிலை மாற்றத்துறை தமிழக பொதுப்பணி துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தது. அதில், நினைவு சின்னம் கட்டமைப்புக்கான மாநில அரசு வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம், பேரிடர் மேலாண்மை திட்டத்துடன் கூடிய இடர் மதிப்பீட்டு அறிக்கை உட்பட பிற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

மேலும், இதுகுறித்து கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, இன்று திருவல்லிக்கேணியில் அதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது, கடலுக்குள் நினைவு சின்னம் அமைக்க வேண்டுமானால் அந்த இடத்தில் கற்களை கொட்ட வேண்டும். அதனால் ஏற்படும் அழுத்தத்தால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். பள்ளிக்கூடங்களை சீரமைக்க பணம் இல்லை பேனா சின்னத்துக்கு எங்க இருந்து காசு வருது. பேனா சின்னம் வைக்கக்கூடாது என்று நாங்கள் சொல்லவில்லை. அறிவாலயத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், கடலில் வைப்பதை அனுமதிக்க முடியாது என்றார். அப்போது திமுகவினர் ஒன்று திரண்டு சீமானுக்கு எதிராக கோஷமிட்டனர்.

அதற்கு பதிலடி கொடுத்த சீமான், ”உங்களுக்கு எதை பத்தியும் கவலை இல்லை. உங்களை கடற்கரையில் புதைக்க விட்டதே தப்பு; நீ பேனாவை வை, ஒருநாள் நான் வந்து உடைப்பேன் என்று ஆவேசமாக பேசியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று அமைச்சர் சேகர் பாபு பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார். அப்போது அவரிடம், மெரினாவில் கலைஞருக்கு பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்று சீமான் சொன்னதை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, அவர் சிலையை உடைத்தால் எங்கள் கைகள் பூப்பறித்து கொண்டிருக்குமா? எங்களுக்கும் கை இருக்கு” என்று அவர் பதிலடி கொடுத்தார். முன்னதாக திமுகவினர் சீமானை விமர்சித்தபோது, கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்தை மட்டுமே தெரிவிக்க வேண்டும்; வன்முறையை தூண்டும் விதமாக பேசக்கூடாது என்று அறிவுரை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.