அதானி முறைகேடு: கோரிக்கையை ஏற்க மறுக்கும் அரசு – சு.வெங்கடேசன் எம்.பி., குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு கோரிக்கைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன. அந்த வகையில், அண்மையில் வெளியான அதானி குழும முறைகேடுகள் தொடர்பான ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அதானி முறைகேடு தொடர்பான தங்களது கோரிக்கையை அரசு ஏற்க மறுப்பதாக மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அதானியின் பங்குச்சந்தை முறைகேடு குறித்து கூட்டு நாடாளுமன்றக்குழு விசாரிக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை அரசு ஏற்க மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

உண்மையை வெளிக்கொண்டுவர போராடுவதாகவும், ஆனால், அம்பலப்பட்டுவிடுவோம் என்று அஞ்சுகிற அரசு அவையை முடக்குவதாகவும் சு.வெங்கடேசன் எம்.பி., தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸும், விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கவன ஈர்ப்பு நோட்டீஸும் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் சமீபத்தில் ஆய்வறிக்கையை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 3 ஆண்டுகளாக அபரிமிதமாக உயர்ந்துள்ளது. பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. மேலும், போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையில் எழுப்பப்பட்டுள்ளன.

இதையடுத்து, அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரிந்து வருகின்றன. இதனிடையே, ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை குறித்து, “ஹிண்டன்பர்க் அறிக்கை பொய்யானது, உள்நோக்கம் கொண்டது. அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்திய ஒருமைப்பாடு, இந்திய நிறுவனங்களின் தரம், இந்தியாவின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இலக்கு ஆகியவற்றுக்கு எதிரான திட்டமிட்ட தாக்குதல் இந்த அறிக்கை.” என அதானி குழுமம் விளக்கம் அளித்தது.

அதற்கு பதிலடி கொடுத்த ஹிண்டன்பர்க் நிறுவனம், “எங்கள் கேள்விகளுக்கு அதானி குழுமம் பதில் அளிக்கவில்லை. தேசியவாதம் என்ற போர்வை யில் அதானி குழுமம் தனது முறைகேடுகளை மூடி மறைக்க முயற்சி செய்கிறது.” என பகிரங்கமாக குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டது.

அதன் தொடர்ச்சியாக, ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் மீது விசாரணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என செபி அறிவித்தது. இதையடுத்து, எஃப்.பி.ஓ பங்கு விற்பனையை திரும்பப்பெற்ற அதானி நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது. இதன் மூலம், எல்.ஐ.சி, எஸ்.பி.ஐ., வங்கி மூலமாக பொதுமக்களின் கணிசமான பணம் அதானி குழுமத்தில் சிக்கியுள்ளது. எனவே, பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.