புதுடெல்லி: அதானி நிறுவன விவகாரத்தை எழுப்பி எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றம் இன்று காலை 11 மணிக்கு கூடியதும், சபாநாயகர் ஓம் பிர்லா, ஜாம்பியாவில் இருந்து வந்திருந்த நாடாளுமன்ற குழுவை வரவேற்று கேள்வி நேரத்தைத் தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதானி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியாகி இருக்கும் ஹின்டென்பர்க் அறிக்கை குறித்து விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த சபாநாயகர் ஓம் பிர்லா, அமைதி காக்கும்படி எதிர்கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். எனினும், எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால் அவை நடவடிக்கைளை பிற்பகல் 2 மணிவரை ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இரண்டு மணிக்கு அவை மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதையடுத்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் இதே விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக மாநிலங்களைவத் தலைவர் ஜக்தீப் தன்கர், முதலில் அவையை 2 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியதும் மீண்டும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சிகள், அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபட்டதா என்பது குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மேற்பார்வையிலான குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.