இந்தியாவில் முதல் முறை: சென்னை விமான நிலையத்தில் தியேட்டர் திறப்பு
வெளிநாடுகளில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் தியேட்டர் உண்டு. பயணிகள் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை வரும்போது பொழுதுபோக்க இது பயன்படும். விமான நிலையத்தில் தியேட்டர் அமைக்கும் திட்டம் முதலில் மும்பை மற்றும் டில்லியில் அமைவதாக இருந்தது. ஆனால் இட நெருக்கடி காரணமாக அங்கு அமையவில்லை. அந்த இடத்தை சென்னை விமான நிலையம் பிடித்து விட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 250 கோடி மதிப்பீட்டில் மல்டிலெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம், திரையரங்கம், ஓட்டல்கள், கடைகள் கொண்ட கட்டிட பணிகள் முடிவடைந்து விட்டன. கடந்த டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய மல்டி லெவல் கார்பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த பணிகளின் ஒரு பகுதியாக 5 திரைகள் கொண்ட திரையரங்கம் நேற்று திறக்கப்பட்டது. விமான பயணிகள் புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து படம் பார்க்கலாம்.