கண்ணூர்: கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ப்ரிஜித் (35) இவரது மனைவி ரீஷா (26). மனைவி ரீஷாவுக்கு பிரசவ வலி ஏற்பட குடும்பத்தினர் அவரை காரில் அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு புறப்பட்டனர். மாருதி எஸ்-பிரஸ்ஸோ ரக காரில் 6 பேர் பயணித்துள்ளனர். பின்னிருக்கையில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் இருந்துள்ளனர்.
அப்போது திடீரென கார் தீப்பிடித்தது. காரின் முன் கதவுகள் பூட்டிக்கொள்ள உள்ளே இருந்தவர்களில் கணவன் பிரஜித், மனைவி ரீஷா பயங்கர அலறலுடன் துடிதுடித்து உயிரிழந்தனர்.
பின்னிருக்கையில் இருந்தவர்களில் குழந்தை மட்டும் காயங்களின்றி தப்பியது. மற்றவர்களை பொதுமக்கள் காப்பாற்றினர். ஆனால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கண்ணூர் காவல் ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் அஜித் குமார், “விபத்துக்குள்ளான கார் முழுமையாக ஆய்வு செய்யப்படும். கார் விபத்து ஏன் எப்படி ஏற்பட்டது என்பது உறுதியானதவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் “கர்ப்பிணி பெண் அலறித் துடிப்பதைக் கண்டு மனம் நொறுங்கிவிட்டது. ஆனால், அவர்களை நெருங்க முடியாத அளவுக்கு நெருப்பு இருந்தது. எரிபொருள் டேங் வெடித்துவிடுமோ என்ற அச்சத்தினாலும் நெருங்க முடியாமல் கையறு நிலையில் நின்றோம்” என்றனர்.