தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முருக பக்தர்கள் பாதயாத்திரையாக திதி, திருசெந்தூர், பழனி என்று அனைத்து முருகன் கோவிலுக்கும செல்கின்றனர். அதில், முருகனின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது.
இதைத்தொடர்ந்து, பக்தர்களின் வழிபாட்டுக்காக வேல் வழிபாட்டுக்குழுவினர் சார்பில் சண்முக நதிக்கரையோரம் சுமார் 24 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக தைப்பூசத்திருவிழாவின் போது வேல் வழிபாட்டுக்குழுவினர் இந்த வேலை வைத்து விட்டு திருவிழா நிறைவடைந்ததும் எடுத்துச் சென்று விடுவார்கள். அப்போது கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த வேல் முன்பு நின்று செல்பி எடுத்தும், குழு புகைப்படம் எடுத்தும் செல்வார்கள்.
இருப்பினும், இந்த வேல் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி பழனி வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் அகற்றினர். இதையறிந்த பக்தர்கள் மற்றும் வேலை பிரதிஷ்டை செய்த வேல் வழிபாட்டுக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர்.
சண்முக நதி கரையோரம் இருக்கும் இந்த வேலை பார்த்தால் பக்தர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். ஆனால், அதிகாரிகள் இவற்றை இடையூறாக இருப்பதாக கூறி அகற்றியுள்ளனர். ஆகவே, மீண்டும் அதே இடத்தில் வேல் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.