திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி அருகே மெதிபாளையத்தில் வசித்து வரும் அகிலா என்பவருக்கு மனோஜ் குமார் என்ற 14 வயது மகனும், இரு மகள்களும் இருக்கின்றனர். கணவர் இறந்த நிலையில் கூலி வேலை செய்து குழந்தைகளை அகிலா வளர்த்து வந்துள்ளார்.
சிறுவன் மனோஜ் குமார் சரியாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வருவது, கோழி திருடுவது உள்ளிட்ட நிறைய தீய பழக்கங்களை கொண்டுள்ளார். எனவே, அவரை சோழவரம் அருகே இருக்கும் ஜனப்பன்சத்திர தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் அகிலா சேர்த்துள்ளார். அங்கு மனோஜ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நேற்று இரவு அவர் போதை மறுவாழ்வு மையத்தில் இரவு உணவு சாப்பிட்டு விட்டு மயங்கி விழுந்துள்ளார். தனியார் மறுவாழ்வு மைய நிர்வாகிகள் மனோஜை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிறுவன் உயிரிழந்து விட்டதாக தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பெற்றோருக்கு சிறுவனின் இறப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட அவர்கள் விரைந்து வந்து சிறுவன் உடலை பார்த்துவிட்டு கதறி அழுது தனது குழந்தையை அடித்து கொன்று விட்டதாக குற்றம் சாட்டினார்கள்.
இதனை தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சிறுவனை கழிவறையில் வைத்து மூச்சு திணற கட்டையால் அடித்து வாந்தி எடுக்க வைத்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தில் நான்கு பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். போதை மறுவாழ்வு மைய உரிமையாளரான விஜயகுமார் மற்றும் ஊழியர்கள் டெல்லி பாபு, யுவராஜ், ஜீவிதன் ஆகிய நான்கு பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.