இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர் கே.விஸ்வநாத் காலமானார்

சங்கராபரணம் உள்ளிட்ட பல அற்புதமான படங்களை இயக்கிய, இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவரான, கே.விஸ்வநாத்(93), வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது இழப்பு, இந்திய திரையுலகை சோகக்கடலில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களில் முக்கியமானவர் கே.விஸ்வநாத். தெலுங்குத் திரையுலகத்தில் பல அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியவர். 1965ம் ஆண்டில், இயக்குனராக அறிமுகமான கே.விஸ்வநாத், தான் இயக்கிய முதல் படமான ‛ஆத்ம கவுரவம்' படத்துக்கு சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த படத்துக்கான நந்தி விருதை வென்றார். தொடர்ந்து அவர் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான பல படங்கள், சூப்பர் ஹிட் ஆகின.
அவர் இயக்கிய 53 படங்களுள், ‛சங்கராபரணம், சாகரசங்கமம், ஸ்ரீவெண்ணிலா, ஸ்வாதிமுத்யம், சூத்ரதாரலு, ஸ்வராபிஷேகம்' போன்ற பல படங்கள், காலத்தை கடந்தும் சினிமா ரசிகர்களால் பாராட்டப்படுபவை. தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய ‛சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து' ஆகியவை, அவர் புகழ்பாடும் தமிழ் படங்களாகும். மேலும், தமிழில், ‛குருதிப்புனல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகனி, லிங்கா, உத்தம வில்லன்' உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
திரையுலகுக்கு அவர் ஆற்றிய சேவையை பாராட்டி, இந்திய சினிமாவின் உயரிய விருதான ‛தாதா சாகேப் பால்கே விருது' மற்றும் ‛பத்ம ஸ்ரீ' விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது, 11 முறை பிலிம் பேர் விருது வென்ற அவர், ‛கலா தபஸ்வி' என அழைக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக, கடந்த சில காலமாகவே, சினிமாவிலிருந்து விலகி ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், தனது ஐதராபாத் இல்லத்தில் கே.விஸ்வநாத் காலமானார். அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் உள்ளிட்ட பலரும், சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.