கணவனுக்கு காய்ச்சல் பூச்சிக் கொல்லி மருந்தை ஊசியில் போட்ட மனைவி..! குடும்ப குத்துவிளக்கு செஞ்ச காரியம்

திருப்பூர் அருகே திருமணமாகாமல் நீண்ட நாட்களாக பெண் தேடும் முதிர் காளையர்களை திருமணம் செய்து கொள்வதை வாடிக்கையாக்கிய பெண் ஒருவர் , சொத்துக்காக 3 வது கணவருக்கு பூச்சிக் கொல்லி மருந்தை ஊசியில் ஏற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் – குன்னத்தூர் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி விவசாய தொழில் செய்து வந்த இவர், தனக்கு ஏற்ற பெண்ணுக்காக காத்திருந்ததார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது 51 வயதில் திண்டுக்கல்லை சேர்ந்த 35 வயதுடைய தேவி என்பவரை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பின்னர் சுப்பிரமணியின் தாய்க்கும், மனைவி தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து அங்குள்ள வீட்டை விற்று விட்டு வாருங்கள் திண்டுக்கல்லுக்கு சென்று தனியாக வாழலாம் என சுப்பிரமணியை தேவி அழைத்துள்ளார் தாய் பிரிந்து சென்றதால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான சுப்பிரமணிக்கு கடந்த 15-ந்தேதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக சுப்பிரமணியின் வலது காலில் தேவி ஊசி ஒன்றை செலுத்தியுள்ளார்.

அதற்கு பின்னர் சுயநினைவை இழந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக திருப்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் நாமக்கல்லில் வைத்து மடக்கி பிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் தேவிக்கு ஏற்கனவே 2 பேருடன் திருமணமான நிலையில் 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்த அவர், நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக ரவி என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. நாமக்கல்லை சேர்ந்த ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கோடீஸ்வரரான அவர் மனைவியை விவாகரத்து செய்து விட்டு சிங்கிளாக இருப்பதை அறிந்து அவருக்கு குறிவைத்துள்ளார்.

சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்த தேவி, சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்ற பேராசையில் கடந்த 15-ந்தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியதும், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.

4 பேரின் வாழ்க்கையுடன் விளையாடிய தேவியின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விரிவாக விசாரித்து வருகின்றனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.