கர்நாடகாவில் காங்கிரஸுக்கு வாக்கு சேகரித்தது ஏன்? – திருமாவளவன் விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. இண்டியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அந்த கட்சிக்கு கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் மேலிடம் சீட் வழங்கவில்லை.

இந்நிலையில் கடந்த 19-ம் தேதி விசிக தலைவர் திருமாவளவன் பெங்களூருவுக்கு வந்தார். அவர் அங்கு விசிக தனித்து போட்டியிடும் பெங்களூரு ஊரகம் மற்றும் மத்திய தொகுதி, கோலார் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்வார் என அக்கட்சியினர் மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் 3 நாட்கள் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பெங்களூருவில் 4 தொகுதிகளிலும் வீதி வீதியாக பிரச்சாரம் செய்தார்.

அந்த தொகுதிகளில் விசிக போட்டியிட்டபோதும் அக்கட்சி தலைவர் எதிர் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து திருமாவளவன் கூறியதாவது: கர்நாடகாவை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய மூன்று கட்சிகளை சுற்றியே அரசியல் சுழல்கிறது. எனவே தமிழகத்தை போல காங்கிரஸ் கூட்டணியில் எங்களுக்கு இங்கு இடம் கிடைக்கவில்லை.

இருப்பினும் எங்கள் கட்சியினர் தேர்தல் அனுபவத்தை பெறுவதற்காகவும், எங்களின் வலிமையை காட்டுவதற்காகவும் தனித்து போட்டியிட்டனர். ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் எங்களுக்கு கணிசமான வாக்குகள் இருக்கின்றன. தொகுதிவாரியாக சில ஆயிரம் வாக்குகளை தாராளமாக பெற முடியும் என உள்ளூர் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் அது காங்கிரஸின் வெற்றியை பாதிக்கும் சூழல் இருந்தது.

எங்களது வாக்குகள் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கக் கூடியது. தற்போதைய சூழலில் காங்கிரஸின் வெற்றியே முக்கியம் என்பதால் எங்கள் கட்சி வேட்பாளர்களுக்காக நான் பிரச்சாரம் செய்யவில்லை. கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் என்னிடம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததால் 3 தொகுதிகளிலும் விசிகவுக்கு நான் பிரச்சாரம் செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.