![](https://newstm.in/h-upload/2023/02/06/500x300_1043726-eps-annamali.jpg)
அதிமுக ஒவ்வொரு விஷயத்தையும் பாஜகவிடம் கேட்டு செய்வதற்கு, பேசாமல் பாஜகவுடன் அதிமுகவை இணைத்து விடலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒரு தொகுதி இடைத்தேர்தலுக்கே அதிமுக – பாஜக கூட்டணி பல களேபரங்களை நடத்திவிட்டது. மாறி மாறி ஆலோசனை, சந்திப்பு என்று இப்போது வரை ஒரு முடிவு எட்டப்படவில்லை. இதனால் பாஜக – அதிமுக கூட்டணி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி குழம்பி போன குட்டை போன்றது, அது என்றும் தெளியாது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அதிமுக ஒன்றிணைவதை பாஜகவினர் விரும்ப மாட்டார்கள் என்றும், அந்தக் கட்சியை அழித்து அதன் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க நினைக்கிறார்கள் எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
![](https://newstm.in/h-upload/2023/02/06/1043727-balakrishnan.webp)
சுதந்திரமாக வேட்பாளரை கூட அறிவிக்க முடியாத நிலையில்தான் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று கூறியுள்ள பாலகிருஷ்ணன், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஜெயலலிதா தலைவரா அண்ணாமலை தலைவரா என்பது கூட தெரியாத அளவிற்கு அவர்களின் செயல்பாடு உள்ளது என்று கடுமையாக சாடியுள்ளார்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் அண்ணாமலையிடம் போய் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கருத்தை கேட்டு வருகின்றனர், இதற்கு பேசாமல் பாஜக உடன் அதிமுகவை இணைத்துவிடலாம் என பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
newstm.in