கர்நாடகாவில் ஹெலிகாப்டர் ஆலை உள்ளிட்ட ஒன்றிய மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

பெங்களூரு: கர்நாடகாவில் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை இன்று தொடங்கி வைத்து பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைப்பதற்காக கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. வரும் மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி கர்நாடகம் வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் உப்பள்ளி, யாதகிரி மற்றும் கலபுரகியில் நடந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். இந்நிலையில், பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகிறார். அவர் துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய பசுமைகள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையைத் திறந்து வைக்கிறார். இங்கு முதல்கட்டமாக இலகுரக ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும். இந்தத் தொழிற்சாலையில் 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நடைபெறும் இந்திய மின்சார வார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதை முடித்துக்கொண்டு அவர் ஹெலிகாப்டரில் துமகூருவுக்குச் செல்கிறார். இதையொட்டி இன்று காலை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.