கடந்த டிசம்பர் மாதம் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பதினேழு வயது சிறுவன் கோகுல் ஸ்ரீ என்பவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
கூர் நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்ட இருதினங்களிலேயே சிறுவனுக்கு உடல்நிலை சரியில்லை என்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்.
கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் உயிரிழந்தது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அந்த விசாரணையில், கூர்நோக்கு இல்லத்தில் சிறுவனை சிலர் கொடூரமாக அடித்து கொன்றது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில் சிறுவன் கொலை செய்த வழக்கில், கூர்நோக்கு இல்லத்தில் உள்ள ஊழியர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று முதலமைச்சர் ஸ்டாலின், செங்கல்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூபாய் பத்து லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். அதாவது சிறுவனின் தாயாருக்கு 7.5 லட்சமும் முதல்வர் நிவாரண நிதியிலிருந்து 2.5 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டும்மல்லாமல், சிறுவனின் தாயாருக்கு அரசு சார்பில் ஒரு வீடும் ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள கூர்நோக்கு இல்லங்கள் குறித்து கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.