துருக்கியில் அவ்வப்போது நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்தது. இங்குள்ள கோய் நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்தன. ஏராளமானோர் உயிரிழந்தனர். கடந்த வாரம், துருக்கி-ஈரான் எல்லையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 122 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தான், இன்று காலை மீண்டும் நூர்தாகி அருகே 9 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அமெரிக்காவின் புவி ஆய்வு மையம்,” துருக்கியின் தெற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்திருக்கிறது.
மேலும், இந்த நிலநடுக்கம் குறித்து வெளியான செய்தியில், அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 3.20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகவும், குறைந்தது 15 பேர் இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள் பல இடிந்து விழுந்திருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. ஆனால், துருக்கி அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்பட அண்டை நாடுகளில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.