மதுரை மாவட்டத்தில் உள்ள கோவலன் நகர் மணிமேகலை தெருவை சேர்ந்தவர் அன்புசெல்வம் – ஜானகிஸ்ரீ தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று இவர்கள் தைப்பூச தினத்திற்காக தனது மகள்கள் மித்ராஸ்ரீ, ரக்சனாஸ்ரீ மற்றும் தனது உறவினர் மகள் தாரணி உள்ளிட்டோரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு, அவர்கள் கோவில் அருகிலுள்ள ஒரு சிற்றுண்டி கடையில் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளார்கள். அதனை சாப்பிட்ட மூன்று குழந்தைகளும் திடீரென வாந்தி எடுத்துள்ளனர்.
இதைப்பார்த்து சந்தேகமடைந்த ஜானகிஸ்ரீ குழந்தைகள் சாப்பிட்ட ஐஸ்கிரீமை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, ஐஸ்கிரீமில் ஒரு தவளை செத்து கிடந்தது.
இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மூன்று குழந்தைகளையும் உடனே திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, குழைந்தைகளின் தாயார் ஜானகிஸ்ரீ ஐஸ்கிரீமில் தவளை உயிரிழந்தது குறித்து திருப்பரங்குன்றம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.