முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை – தமிழகம் விரையும் மத்திய அரசின் குழு!
தமிழகத்தில் ஈரப்பத நெல் கொள்முதல் தொடர்பாக மத்திய அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்துள்ளது.
அறுவடை செய்யத் தயாராக இருந்த நேரத்தில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெய்த பருவம் தவறிய மழையால், ஆரம்ப மதிப்பீட்டின்படி சுமார் ஒரு இலட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி, அறுவடைப் பணியை மீண்டும் தொடங்கிடத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வரும் நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்வதால் அறுவடை செய்யப்பட்ட தானியத்தில் ஈரப்பத அளவு மிக அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலையில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்த நிலையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்கவும், முதிர்ச்சியடையாத சுருங்கிய நெல்லின் குறைந்தபட்ச வரம்பை 3 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரை தளர்த்தவும், சேதமடைந்த, நிறமாற்றம் மற்றும் முளைத்த நெல்லை 5 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதம் வரை தளர்த்தவும், தேவையான மதிப்பை இந்த சம்பா பயிருக்கும் குறைக்கவும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்குமாறு பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்த பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு 3 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைத்துள்ளது.