92வது வருடத்தில் தெலுங்கு சினிமா

இந்திய சினிமாவின் முதல் திரைப்படமாக 'ராஜா ஹரிச்சந்திரா' படம் 1913ம் வருடம் மே 3ம் தேதி வெளியானது. அது ஒரு சைலன்ட் திரைப்படம். முதன் முதலில் பேசும் படமாக ஹிந்தி மொழியில் 'ஆலம் ஆரா' படம் 14 மார்ச் 1931ம் வருடம் வெளிவந்தது. அந்தப் படத்தை அர்தேஷிர் இரானி இயக்கியிருந்தார்.

தமிழில் முதல் பேசும் படமான 'காளிதாஸ்' அக்டோபர் 31ம் தேதி, 1931ம் ஆண்டு வெளிவந்தது. படத்தின் கதாநாயகி டி.பி.ராஜலட்சுமி தமிழில் பேச, கதாநாயகன் வெங்கடேசன் தெலுங்கில் பேச, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த எல்வி பிரசாத் ஹிந்தியில் பேச அப்படம் வெளியானது. ஹிந்தியில் முதல் பேசும் படமான 'ஆலம் ஆரா' படத்தை இயக்கிய அர்தேஷிர் இரானி இப்படத்தைத் தயாரிக்க, எச்.எம்.ரெட்டி இயக்கியிருந்தார். அதன் பிறகு 1931ல் நான்கு தமிழ்ப் படங்கள் வந்தாலும் அப்படங்கள் வெளியான தேதி உறுதியாகத் தெரியவில்லை.

தெலுங்கில் முதல் பேசும் படமாக பிப்ரவரி 6ம் தேதி 1932ம் ஆண்டு 'பக்த பிரகலாதா' படம் வெளிவந்தது. 'காளிதாஸ்' படத்தைத் தயாரித்த அர்தேஷிர் இரானி தயாரிக்க, அப்படத்தை இயக்கிய எச்.எம்.ரெட்டி தான் இந்தப் படத்தையும் இயக்கினார். இன்றுடன் தெலுங்கு சினிமாவுக்கு 91 வயது நிறைவுற்று 92வது வருடம் ஆரம்பமாகிறது.

இத்தனை வருடங்களில் கடந்த சில வருடங்களாக 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' என பெரும் சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமா. எண்ணற்ற பல சிறந்த இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்ற கலைஞர்கள் தொடர்ந்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்கள்.

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவுக்கு தலைநகராக விளங்கிய சென்னைக்குப் பதிலாக தற்போது தெலங்காகானா தலைநகரான ஐதராபாத் தான் தலைநகராக மாறிவிட்டது. அந்த அளவிற்கு தெலுங்குத் திரையுலகம் வளர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.