கோயில் நகரமான கும்பகோணத்தில் மசாஜ் சென்டர், தங்கும் விடுதிகள், குடியிருப்பு பகுதிகள் என பல இடங்களில் பாலியல் தொழில் படுஜோராக நடப்பதாக போலீஸாருக்கு புகார் வந்து கொண்டேயிருந்தது. இதனால் பொதுமக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகியதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் இரண்டு மசாஜ் சென்டர்களில் சோதனை செய்த போலீஸ், அவற்றில் பாலியல் தொழில் நடப்பதை கண்டுபிடித்ததுடன், இரண்டு பெண்கள் மற்றும் புரோக்கராகச் செயல்பட்ட மணிகண்டன் என்ற இளைஞரையும் கைதுசெய்தனர்.
இதையடுத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பாலியல் தொழிலில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க, மேற்கு இன்ஸ்பெக்டர் பேபி, தனிப்படை எஸ்.எஐ கீர்த்திவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீஸ் டீம் நடத்திய தீவிர விசாரணையில், அன்னை அஞ்சுகம் நகர்ப் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்துவது போல் பாலியல் தொழில் செய்து வந்த கும்பலைக் கண்டுபிடித்து கைதுசெய்திருக்கின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். “பாலியல் தொழிலில் ஈடுபட்ட கும்பல் அன்னை அஞ்சுகம் நகர்ப் பகுதியில் உறவினர்கள் எனச் சொல்லி வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறது. பாலியல் தொழிலுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மொபைல் ஆப்பில் ரெஜிஸ்டர் செய்கின்ற ஆண்களை அந்த வீட்டுக்கு வரவைத்து பாலியல் தொழில் செய்து வந்தனர்.
மேலும் ஏழ்மை நிலையிலுள்ள இளம்பெண்கள், ஆடம்பரமாக வாழ நினைக்கக்கூடிய பெண்கள் உள்ளிட்டோரிடம் ஆசை வார்த்தைகள் கூறி வலையில் வீழ்த்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது. விசாரணையில் இதனை கண்டுபிடித்ததுடன் திடீரென அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டோம்.
இதில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சோழபுரத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன் (39), ரம்யா, பிரேமி ஆகிய மூன்று பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தோம். அவர்களிடமிருந்து மூன்று டூவீலர்கள், ஆறு செல்போன்கள், ரூ.10,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தோம். அத்துடன் மேலும் மீட்கப்பட்ட இரண்டு பெண்களை தஞ்சாவூரில் அரசு காப்பகத்தில் ஒப்படைத்திருக்கிறோம்” என்றனர்.