திருப்பூர் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை திடீரென நுழைந்து பயணசீட்டு வாங்கும் இடத்தில், சத்தம் போட்டு கையில் கத்தியை வைத்து பயணிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், கத்தியால் தனது கையை கிழித்துக்கொண்டு கலெக்டரும், எம்.எல்.ஏவும் இங்கு வரவேண்டும், என்னுடைய பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று சத்தம் போட்டார். இதை பார்த்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், அந்த வாலிபர் தகாத வார்த்தைகளை பேசி போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த வாலிபர் ஆவேசமாக மிரட்டல் விடுத்து கொண்டே இருந்ததால் தீயணைப்புத் துறையினர் மற்றும் திருப்பூர் வடக்கு போலீஸ் உள்பட சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த வாலிபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, தீயணைப்பு துறையினர் கவச உடைகள், வலைகள் சகிதம் அந்த வாலிபரை பிடிப்பதற்கு முயற்சி செய்தனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் அந்த வாலிபரிடம் இருந்த கத்தியை தட்டிவிட்டு அந்த வாலிபரை பிடித்து சென்றனர்.
அப்போது அந்த வாலிபர் மயக்கமடைந்தது போன்று நடித்துள்ளார். அதனால், அவரை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அந்த வாலிபர் திருப்பூர் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கண்ணன் என்பதும், அவர் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டில் இருந்து வெளியேறி திருப்பூர் ரெயில் நிலையத்தில் கத்தியுடன் புகுந்து, பயணிகளை மிரட்டியதும் தெரியவந்தது.