சேலம் மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (32). இவர் சேலத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவரது புதிய வீடு கட்டும் பணிக்காக நேற்று காலை கார்த்திகேயன் இரும்பு கம்பியை எடுத்துச் சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக உயர் அழுத்தம் மின்சார கம்பியில் இரும்பு கம்பி உரசியதில் கார்த்திகேயன் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், உயிரிழந்த கார்த்திகேயனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.