உலகம் முழுவதும் இன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படும் நிலையில் அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சிவன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த நிலையில் வட தமிழகத்தில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை திருவிழா நாளை நண்பகல் தொடங்கி நள்ளிரவு வரை நடைபெற உள்ளது.
வட தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் இந்த மயான கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இடுகாட்டில் நாளை மயான கொள்ளை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இருந்து மக்கள் ஒன்று கூடுவது வழக்கம் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும்.
இதன் காரணமாக பாலாற்றின் குறுக்கே அமைந்துள்ள வேலூரில் இருந்து காட்பாடி செல்லும் பாலத்தில் நாளை பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிப்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். மேலும் காட்பாடி ரயில் நிலையம் செல்ல விரும்புவோர் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.