விழுப்புரம் மாவட்டம் குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநல பாதிக்கப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் திருப்பூரைச் சேர்ந்த ஜபஹருல்லா என்பவரை சந்திக்கச் சென்ற உறவினர்களிடம் ஆசிரமத்தில் இருந்த ஜவஹருல்லா காணாமல் போனதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜபஹருல்லா உறவினர்கள் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஆசிரமம் முறைகேடாக அனுமதியின்றி செயல்பட்டது தெரியவந்தது.
மேலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்றோர்களை குரங்குகள் வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்தது. அதே போன்று ஆசிரமத்தில் தங்கியிருந்த 15க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இதனை அடுத்து ஆசிரமத்தில் இருந்த அனைவரையும் மீட்ட அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த நிலையில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணைய முதன்மை ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் தலைமையில் 4 பேர் கொண்ட குழு விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 பெண்களிடம் மருத்துவர்களுடன் சென்று விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் ஆசிரமத்தில் தங்கியிருந்த இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய மகளிர் ஆணைய ஒருங்கிணைப்பாளர் காஞ்சன் கட்டார் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்த விசாரணை குறித்தான அறிக்கையை தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.