சென்னை மெட்ரோ: நீலகிரி டூ கொல்லி… TBM மெஷின்களுக்கு தினுசு தினுசா பேரு வச்சாச்சு!

சென்னையின் பொதுப் போக்குவரத்தை அதி விரைவாகவும், சொகுசாகவும் மாற்றும் வகையில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது Phase 1 திட்டத்தின் கீழ் விம்கோ நகர் பணிமனை முதல் விமான நிலையம் (நீல வழித்தடம்), சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை (பச்சை வழித்தடம்) ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

புதிய மெட்ரோ வழித்தடங்கள்

அடுத்து Phase 2 திட்டத்தின் கீழ் மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் (ஊதா வழித்தடம்), கலங்கரை விளக்கம் முதல் பூவிருந்தவல்லி புறவழிச்சாலை (காவி வழித்தடம்), மாதவரம் பால் பண்ணை முதல் சோழிங்கநல்லூர் (சிவப்பு வழித்தடம்) என மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

மலைகள், ஆறுகளின் பெயர்கள்

மொத்தம் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு நடக்கும் இரண்டாம் கட்டப் பணிகள் முடிவடைந்து வரும் 2026ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுரங்கம் தோண்டும் பணிகளுக்கு பயன்படுத்தும் இயந்திரங்களுக்கு (TBM) தமிழ்நாட்டின் சிறப்பு மிகு மலைகள், ஆறுகளின் பெயர்கள் சூட்டுவதை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) வழக்கமாக கொண்டிருக்கிறது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 42.6 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் பாதை செல்கிறது. இதற்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நீலகிரி, பொதிகை

கடந்த 2022ஆம் ஆண்டு முதல் மாதவரம் பால் பண்ணை காலனி முதல் மாதவரம் ஹை ரோடு வரையிலான சுரங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள இரண்டு இயந்திரங்களுக்கு நீலகிரி, பொதிகை எனப் பெயர் சூட்டப்பட்டது.

காவேரி

கிரீன்வேஸ் ரோடு மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஆர்.ஏ.புரம் மாநகராட்சி மைதானப் பகுதியில் பிப்ரவரி 16ஆம் தேதி சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கிய இயந்திரத்திற்கு காவேரி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அடையாறு

மேற்குறிப்பிட்ட பகுதியில் வரும் மார்ச் முதல் பணியை தொடங்கும் புதிய இயந்திரத்திற்கு அடையாறு என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

ஆனைமலை, சேர்வராயன்

மாதவரம் பால் பண்ணை முதல் வேணுகோபால் நகர் வரை சுரங்கம் தோண்டும் பணியில் ஈடுபடும் இரண்டு இயந்திரங்களுக்கு ஆனைமலை, சேர்வராயன் என்று பெயர்.

நொய்யல், வைகை

கிரீன்வேஸ் சாலை முதல் மந்தைவெளி வரையிலான சுரங்கம் தோண்டும் பணிகளில் ஈடுபடும் இயந்திரங்களுக்கு நொய்யல், வைகை எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கல்வராயன், மேலகிரி

அயனாவரம் முதல் பெரம்பூர் வரை நடக்கும் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள இரண்டு இயந்திரங்களுக்கு கல்வராயன், மேலகிரி என்று பெயர்.

சிறுவாணி, பாலாறு, பவானி, தாமிரபரணி

சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் ரோடு மற்றும் கே.எம்.சி வரை சுரங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள நான்கு இயந்திரங்களுக்கு சிறுவாணி, பாலாறு, பவானி, தாமிரபரணி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கொல்லி

அயனாவரம் முதல் ஓட்டேரி வரை நடக்கும் சுரங்கப் பணிகளில் ஈடுபட்டுள்ள இயந்திரத்திற்கு கொல்லி என்று பெயர் சூட்டியுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.