“பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு” – விருதுநகரில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப்பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எம்.பி., எம்,எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. மாணிக்கம் தாகூர் எம்.பி. தலைமை வகித்தார். கண்காணிப்புக் குழு உறுப்பினர் செயலரும் மாவட்ட ஆட்சியருமான வீ.ப.ஜெயசீலன், எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மத்திய மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களின் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள், இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட பணிகள், முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் இதுவரை மாவட்ட தொழில் மையம் சார்பில் 216 பேருக்கு ரூ.6.74 கோடி கடனுதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது, எம்.பி. மாணிக்கம் தாகூர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ரகுராமன், அசோகன் ஆகியோர் பேசுகையில், “புதிதாக தொழில் தொடங்க வரும் இளைஞர்களுக்கு இத்திட்டத்தின்கீழ் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், இக்கடன் வழங்க அடமானமாக அசையா சொத்து கேட்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன. இத்திட்டத்திற்கு அடமானம் பெறுவதற்கான அவசியம் இல்லை. அவ்வாறு இருக்க வங்கிகள் அடமானம் கேட்டு கடன் கொடுக்காமல் இளைஞர்களை திருப்பி அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும். அதோடு, குறிப்பிட்ட இலக்கைவிட அதிகமாக கடன் வழங்க முயற்சிக்க வேண்டும்” என்றனர்.

மேலும், பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் 4,399 பயனாளிகள் கேஸ் இணைப்பு பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது, மாணிக்கம் தாகூர் எம்.பி. பேசுகையில், “இத்திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சிலர் இணைப்பு பெறுவதை நிறுத்தியிருக்கலாம். அதனால், திட்டப் பயனாளர்களில் எத்தனைபேர் முறையாக பயன்பெறுகின்றனர் என்ற பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும்” என அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரி விளக்கினார்.

அப்போது, விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 1,722 பள்ளிகளில் 3,24,049 மாணவ, மாணவிகள் பயின்று வருவதாகவும், 2022-23ம் கல்வியாண்டில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும், இதுவரை 676 பேர் கண்டறியப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாற்றுத்திறன்கொண்ட உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் மாவட்டத்தில், 3,538 மாற்றுத்திறன்கொண்ட மாணவர்களில் பயின்று வருவதாகவும் அதில், 553 பேர் வீட்டிலிருந்தபடியே பயிற்சி பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

அப்போது, மாணிக்கம்தாகூர் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ,க்கள் பேசுகையில், “பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே போதைப் பொருள்கள் விற்பனை அதிகமாக நடப்பதாக புகார்கள் வருகின்றன. இருசக்கர வாகனங்களில் பொதைப் பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்கிறார்கள். இதற்கு பள்ளி மாணவர்கள் அடிமையாகிறார்கள். இது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும். இது மாணவர் சமுதாயத்தை பெரிதும் பாதிக்கும்” என்றனர்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பேசுகையில், “பள்ளிகளுக்கு அருகே பல்வேறு வகைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. சாக்லெட் வடிவிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் இதற்காக ஒரு கண்காணிப்பு ஆசிரியர் நியமிக்கப்பட்டு பள்ளியைச் சுற்றியுள்ள கடைகளில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும். அதோடு, விசாரிக்கவும் வேண்டும். இதுதொடர்பாக விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும். போதைப் பழக்கத்திலிருந்து மாணவர்களை காப்பதில் நமக்கு பொறுப்பும் கடமையும் உள்ளது” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இக்குநர் திலகவதி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், உள்ளட்சிப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.