மோர்பி பால விபத்து | உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

காந்திநகர்: குஜராத்தின் மோர்பி நகரில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விபத்தின் பின்னணி: குஜராத்தின் மோர்பி நகரில் மச்சூ நதியின் குறுக்கே ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட 233 மீட்டர் நீளம் கொண்ட கேபிள் நடைபாலம் கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி பாரம் தாங்காமல் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மீது இருந்தவர்களில் 135 பேர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து மோர்பி நகர காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. பாலத்தை சீரமைக்கும் ஒப்பந்தத்தை ரூ.2 கோடிக்குப் பெற்ற ஒரேவா குழுமம், சீரமைப்புப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ஒரேவா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஜெய்சுக் படேல் கடந்த ஜனவரி 31ம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு தொடர்பாக 1,200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

நீதிமன்ற விசாரணை: இந்த வழக்கை விசாரித்த குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சோனியா கோகானி, நீதிபதி சந்தீப் பட் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் 4 வார காலத்திற்குள் ஒரேவா குழுமம் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.